விவசாயிகள் நடத்திய வீரவணக்க பேரணி

பல்லடம்: மின் கட்டணத்துக்காக போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், பல்லடத்தில் பேரணி நடந்தது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முத்து விஸ்வநாதன், ரமேஷ் சிவகுமார், சண்முகசுந்தரம் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே துவங்கி, மங்கலம் ரோடு, என்.ஜி.ஆர்., ரோடு வழியாக உழவர் சந்தை வரை பேரணி நடந்தது.

வேளாண் உரிமை மின்சார திட்டத்தை இனி ரத்து செய்ய முடியாத வகையில் சட்டம் இயற்ற வேண்டும். தெலுங்கானாவை போல், விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்க விவசாய கடன்களுக்கு 'சிபில்' ஸ்கோர் பார்க்கப்படும் என்ற முடிவை ரத்து செய்ய வேண்டும்.

கிடப்பில் போடப்பட்டுள்ள ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement