திருந்தாதவர்களை 'திருத்தணும்'

கோவை மாநகரில் அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கையால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒன்வேயில் செல்லுதல், வேகமாக வாகனத்தை இயக்குதல், நோ பார்க்கிங்கில் நிறுத்துதல் உள்ளிட்ட விதிமீறல்கள் அதிகரித்து விட்டன.

அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு உட்பட பல்வேறு பிரதான சாலைகளில் மட்டுமின்றி, குறுக்கு சாலைகளிலும் காலை, மாலை 'பீக்' நேரங்களில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதையும், அதனால் வாகன ஓட்டிகள் அவஸ்தைப்படுவதையும் பார்க்க முடிகிறது.

குறுக்கு சாலைகளில் நெரிசலை தவிர்க்க ஒரு வழிப்பாதை, 'நோ பார்க்கிங்' உள்ளிட்ட விதிமுறைகளை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனால், விதிமீறல் வாகனங்களால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பாதசாரிகளும் விபத்துக்களை சந்திக்கின்றனர்.

ஒரு வழிப்பாதையில் 'போலீஸ் ஜீப்' அவசர காலத்திற்கு செல்கிறது என்றால், அரசு வாகனங்களும் அதே பாணியை கடைபிடிக்கின்றன. அரசு கலை கல்லுாரி ரோடு, ராம் நகர், ராஜாஜி ரோடு, சிவானந்தா காலனி, வடகோவை, செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட இடங்களில், வாகனங்கள் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படுவதை காணமுடிகிறது.

ஒன்வேயில் வாகனம் இயக்குவோரால், பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. மாநகரில் மட்டும் கடந்த ஆறு மாதங்களில், 147 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். ஜூன் மாதம் மட்டும், 25 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடித்தாலே விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும். போக்குவரத்து போலீசாரும் மாநகராட்சியும் இணைந்து, முக்கிய இடங்களில் பார்க்கிங் வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

Advertisement