உழவர் சந்தைகளில் முகாம் நடத்தி அடையாள அட்டை வினியோகம்

கோவை; கோவை மாவட்டத்தில், உழவர் சந்தைகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், முகாம் நடத்தப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லுார், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், குறிச்சி, சுந்தராபுரம், சூலுார், வடவள்ளி ஆகிய எட்டு இடங்களில், உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. உழவர் சந்தைகளில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில், வாரந்தோறும் சனிக்கிழமை விவசாயிகள் அதிகம் உள்ள இடங்களில், முகாம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து, வேளாண் விற்பனை மற்றும் வணிக துணை இயக்குனர் மீனாம்பிகை கூறியதாவது:

கோவையில், எட்டு சந்தைகளிலும் சேர்த்து, 634 பேர் கடைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு, 180 டன் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.

வேளாண் பொருட்கள், வேளாண் விளை பொருட்களை உழவர் சந்தைகளிலும், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் விவசாயிகள் விற்பனை செய்யலாம்.

உழவர் சந்தைகளில் விற்பனை செய்ய, அடையாள அட்டை அவசியம். 998 பேருக்கு அடையாள அட்டை முன்பே வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், முகாம் நடத்தி, மேலும் 40 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, 1038 பேர் உழவர் சந்தை வாயிலாக, தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

ஆர்வமுள்ள விவசாயிகள் அந்தந்த உழவர்சந்தைகளை அணுகி, விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்யலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement