பனை மரங்களை பாதுகாக்க பொதுமக்களுக்கு.. விழிப்புணர்வு தேவை ; செங்கல் சூளைகளுக்காக வெட்டி அழிக்கின்றனர்

சாயல்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி, திருப்புல்லாணி உட்பட பல கிராமங்களில் ரியல் எஸ்டேட் மற்றும் செங்கல் சூளைகளுக்காக பனை மரங்கள் வெட்டி அழிக்கப்படுகின்றன. அவற்றை தடுப்பதற்கும், பாதுகாக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாயல்குடி, பூப்பாண்டியபுரம், மேலச்செல்வனுார், கீழச்செல்வனுார், கீழக்கிடாரம், நரிப்பையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகளவு பனை மரங்கள் உள்ளன. பனை மரத்தொழிலை நம்பி பல ஆயிரம் குடும்பத்தினர் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ளனர்.

பனை மரங்களை வெட்டி அழிப்பதை தொழிலாக கொண்டுள்ள சில தனி நபர்களின் போக்கால் பலன் தரும் நிலையில் உள்ள பனை மரங்கள் பேரழிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சாயல்குடி வி.வி.ஆர்.நகரை சேர்ந்த பனைமர இயற்கை ஆர்வலர் ராஜபாண்டியன் கூறியதாவது:

மாவட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் உள்ளன. 30 ஆண்டுகளாக பனை மரங்களை உரிய இடங்களில் நட்டு வைத்து அவற்றை பராமரிப்பது குறைந்து விட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட பனை மரங்களே தற்போது வரை பலன் தந்து கொண்டிருக்கின்றன.

ஒரு பனைமரத்தை ரூ.200 முதல் ரூ.300 வரை மொத்தமாக விலைக்கு வாங்கும் இடைத்தரகர்கள் அவற்றை பல துண்டுகளாக கூறு போட்டு லாரிகளில் செங்கல் சூளைகளின் எரிபொருள்களுக்கு அனுப்பி வைக்கும் போக்கு தொடர்கிறது.

சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பனைமரத்தை வெட்டி அழிக்கும் போக்கால் இதனை சார்ந்துள்ள பனைத் தொழிலாளர்களின் குடும்பமும், கருப்பட்டி காய்ச்சும் தொழிலும் பெருமளவில் நசிவை சந்திக்கும். நிலத்தடி நீரை சேமித்து மண் வளத்தை காக்கக்கூடிய பனைமரம் குறித்த விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்

இது குறித்து தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

--

Advertisement