திருஇருதய ஆண்டவர் சர்ச் நற்கருணை விழா நிறைவு

மானாமதுரை : மானாமதுரை அருகே இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் சர்ச் 131 ம் ஆண்டு திருவிழா நற்கருணை பெருவிழா திருப்பலியுடன் நிறைவு பெற்றது.

புகழ்பெற்ற இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்தஆண்டுக்கான திருவிழா ஜூன் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் சர்ச் வளாகத்தில் திருத்தல அருள் பணியாளர் ஜான் வசந்தகுமார் தலைமையில், பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி நடத்தினர்.

முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர் பவனி ஜூலை 4 ம் தேதி நடைபெற்றது. அன்று காலை 11:00 மணிக்கு சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லுார்துஆனந்தம், முன்னாள் மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர்.

நேற்று முன்தினம் இரவு நற்கருணை பெருவிழா சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவு பெற்றது.

Advertisement