முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி:முருகன் கோவிலில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவசம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது.

மாலை 5:00 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் சாய்ரட்சை பூஜையும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி - தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி தேர்வீதியில் வலம் வந்தார்.

நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை 6:00 மணி முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வீதியில் குவிந்தனர்.

பொது வழியில் பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேல் தேர்வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

மேலும், 100 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.

சில பக்தர்கள் மொட்டை அடித்தும், காவடிகள் எடுத்தும் நிறைவேற்றினர்.

மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் மட்டுமே மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில், மூன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

Advertisement