ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நாளை அதிகாலை 5:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை முதல் நான்கு கால யாகசாலை பூஜைகள் துவங்கியது.

தமிழகத்தின் தென் திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.

இதனையடுத்து நேற்று முதல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. காலையில் யஜமான வரணம், மகா சங்கல்பம், புண்ணியாக வாசனம், யாகசாலை வாஸ்து நடந்தது. மாலை

5:30 மணிக்கு மேல் முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று (ஜூலை 13) காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடக்கிறது.

நாளை (ஜூலை 14) அதிகாலை 4:45 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடு ஆலய ப்ரதக்ஷிணம் நடக்கிறது. பின்னர் அதிகாலை 5:30 மணிக்கு மேல் 6:15 மணிக்குள் விமானம், பரிவார மூர்த்திகள், ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.

Advertisement