நடைபாதையை உடைத்து மின்தடம்: மக்கள் அவதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், புதைவட மின்பாதை பணிக்காக சேதமான மழைநீர் வடிகால்வாய் தளத்தை, மின்வாரியத்தினர் முறையாக சீரமைக்காததால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையோரம் தளத்துடன் வடிகால்வாயும், அதன்மீது நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

மழைநீர் மட்டுமே செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இக்கால்வாயில் வீடு, உணவகம், டீக்கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை பலர் முறைகேடாக விட்டுள்ளனர். இதனால், கால்வாயில் துர்நாற்றத்துடன் கழிவுநீர் செல்கிறது.

இந்நிலையில், காமாட்சியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் மழைநீர் கால்வாயின் தளத்தை உடைத்து புதைவட மின்பாதைக்கான மின் ஒயரை பொருத்தி உள்ளனர்.

உடைக்கப்பட்ட கால்வாய் தளத்தை முறையாக சீரமைக்கவில்லை. கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகள் தவறுதலாக கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, செங்கழுநீரோடை வீதியில், புதைவட மின்பாதை பணிக்காக சேதமான மழைநீர் வடிகால்வாய் தளத்தை மின்வாரியத்தினர் முறையாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement