பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த வீராணக்குன்னம் அருகே கீழ்பட்டு கிராமத்தில், பொன்னியம்மன் கோவிலில் , மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

கீழ்பட்டு கிராமத்தில் பழமையான, பொன்னியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிந்து, மஹா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, யாகசாலை அமைக்க பந்தக்கால் நடப்பட்டது.

அதன்படி, கடந்த வெள்ளியன்று மாலை 6:00 மணிக்கு கிராம தேவதை வழிபாடு, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

பின், இரண்டாம் காலத்தில் லட்சுமி ஹோமம், கோ பூஜை, நவகிரக யந்திர ஸ்தாபனம், வேத பாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது.

மூன்றாம் கால பூஜை ஆரம்பித்து யந்திர உபச்சாரம், தேவார திருமுறைகள் விண்ணப்பம், மஹா தீபாராதனை நடந்தது.

பின், நேற்று, காலை 7:00 மணிக்கு மங்கல இசை, நான்காம் கால யாகசாலை பூஜைகள், விசேஷ திரவிய ஹோமம் நடந்தது. காலை 9:00 மணிக்கு கலசம் புறப்பாடு நடந்தது.

பின், காலை 9:30 - 10:30 மணியளவில், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், விமான கோபுரத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

பின், மூலவர் பொன்னியம்மன் மற்றும் நவ கிரகங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, மஹா அபிஷேக அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை முடிந்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

இன்று முதல், பொன்னியம்மனுக்கு தினமும் 48 நாட்கள், மண்டலாபிஷேக பூஜை நடைபெறும்.

Advertisement