கல்வித்துறை உதவி எண்கள் செயல்பாட்டில் இல்லை; தலைமையாசிரியர்கள் அதிருப்தி

உடுமலை; அரசு நடுநிலைப்பள்ளிகளில், உயர்தர ஆய்வகம் அமைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து, புகார் பதிவு செய்வதற்கான தொலைபேசி எண்கள் செயல்படாமல் இருப்பதாக, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில், 298 அரசு நடுநிலைப்பள்ளிகளில் உயர்தர ஆய்வகம் அமைக்கும் பணிகள், கடந்த 2023-24 கல்வியாண்டின் இறுதி முதல் நடக்கிறது.

நடப்பு கல்வியாண்டு முதல், உயர்தர ஆய்வகங்களை செயல்படுத்த, கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

பள்ளிகளில் ஆய்வகம் அமைக்கும் பணிகளும், முடியும் நிலையில் உள்ளது.

இருப்பினும், பெரும்பான்மையான பள்ளிகளில் ஆய்வகங்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் செயல்பாடில்லாமல் இருப்பது, மின்சார இணைப்பில் பிரச்னை என பல்வேறு சிக்கல்கள் ஆரம்பமாகியுள்ளன.

ஆய்வகம் அமைப்பதில், செயல்படுத்துவதில் ஏதேனும் குழப்பம் இருப்பதை கேட்டறிந்து கொள்வதற்கும், அல்லது புகார் அளிப்பதற்கும், கல்வித்துறையின் சார்பில் சில தொலைபேசி எண்கள், அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:அரசு நடுநிலைப்பள்ளிகளில் ைஹடெக் லேப் எனப்படும் உயர்தர கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து வழிமுறைகளை அறிந்துகொள்ள கல்வித்துறை வழங்கிய உதவி தொலைபேசி எண்களில் அழைத்தால் செயல்பாடில்லை என வருகிறது.

சில எண்களுக்கு அழைப்பே செல்வதும் இல்லை. இதனால் ஒரு சமயம் கம்ப்யூட்டர் ஆய்வக செயல்பாட்டில் குளறுபடி ஏற்படும்போது, என்ன செய்வதெனவும் குழப்பமாக உள்ளது.

இவ்வாறு கூறினர்.

Advertisement