எஸ்.வி.எஸ்., நகர் குளம் ரூ.4.89 கோடியில் சீரமைப்பு

சென்னை, வளசரவாக்கம், எஸ்.வி.எஸ்.நகர் குளத்தில், 4.89 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு, எஸ்.வி.எஸ்.நகர் குளம், 4 ஏக்கர் பரப்பளவு உடையது. சுப்பிரமணிய சுவாமி நகர், ஜெய்நகர், அம்பேத்கர் தெரு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர், இந்த குளத்தை வந்தடையும்.

குளம் ஆக்கிரமிப்பு காரணமாக, தண்ணீர் செல்ல வழியின்றி அப்பகுதிகளில், 2023ல் நான்கு அடி வரை மழைநீர் தேங்கியது.

இதையடுத்து, தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த குளம் மீட்கப்பட்டது. மூடப்பட்டிருந்த குளத்தில் துார்வாருதல், ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டன. இதன் காரணமாக, 2024 கனமழையின்போது அப்பகுதியை மழைநீர் சூழவில்லை.

இந்நிலையில், 4.89 கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதை, பறவைகள் தீவு, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், சிறுவர் விளையாட்டு திடல், திறந்தவெளி அரங்கம், படகு சவாரி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சத்துடன் இக்குளம் உருவாக்கப்பட்டு வருவதாக, சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement