அமைச்சர் மீதான முறைகேடு வழக்கு; இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

2


தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது செய்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.


'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி கழக சட்ட நடைமுறையின் கீழ், அதில் பணிபுரிந்த தொழிலாளியான கர்ணன் என்பவருக்கு, அரசு தொழிலாளர்களுக்கான இடம் ஒன்றை, கடந்த 1995ல் தமிழக அரசு ஒதுக்கி கொடுத்தது.


'அப்படி ஒதுக்கப்படும் இடத்தை, வேறு யாருக்கும் விற்கக்கூடாது; இடம் தேவையில்லை என்றால், அதை மீண்டும் அரசிடம் தான் திருப்பி அளிக்க வேண்டும்' என அரசு விதிகள் தெளிவாக குறிப்பிடுகின்றன.

சம்மன்



இந்த நடைமுறையை மாற்றி, தொழிலாளிக்கு சிட்கோ வழங்கிய இடம் ஒன்றை, அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சட்டவிரோதமாக வாங்கியதாகவும்; இதில் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தோர் புகார் கிளப்பினர்.


இது தொடர்பாக, கடந்த 2019ல் பார்த்திபன் என்பவர், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.


அதையடுத்து, சுப்பிரமணியன் மற்றும் அவருடைய மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு,
விசாரணை நடந்தது.

கீழமை நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் வழக்கு தாக்கல் செய்தார்.



அதை ஏற்று, விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டது. கடந்த மாதம் 28ல் அந்த தடை உத்தரவு நீக்கப்பட்டது.

இதையடுத்து, கோர்ட்டில் ஆஜராக சுப்பிரமணியனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.



கீழமை நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, சுப்பிரமணியன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


இந்த மேல்முறையீட்டு வழக்கு, கடந்த மே 16ல், நீதிபதிகள் சுதன்சு துளியா மற்றும் வினோத்
சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.


அப்போது, சுப்பிரமணியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ''சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது, முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டி உள்ளனர்.

முடிவுற்ற வழக்கு



''மேயராக இருப்பவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றால், அதற்கு, மாநில அரசு தான் அனுமதி வழங்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில், சபாநாயகராக இருந்த தனபால் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.



''பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறைகளே தவறாக இருப்பதால், விசாரணையையே ரத்து செய்ய வேண்டும்,'' என வாதாடினார்.


வாதத்தை ஏற்ற நீதிபதிகள், 'இது தொடர்பாக முடிவுற்ற வழக்குகள் உதாரணமாக உள்ளனவா?' என நீதிபதிகள் கேட்டனர்.


உதாரணங்களை திரட்டி தருகிறோம் என்று சொன்ன சுப்பிரமணியன் தரப்பினர், நேற்றைய விசாரணையின் போது, விபரங்கள் தயார் என நீதிபதிகளிடம் கூறினர்.


அதை ஏற்ற நீதிபதிகள், இன்று விசாரணை தொடரும் எனக்கூறி, வழக்கை தள்ளி வைத்தனர்.



- டில்லி சிறப்பு நிருபர் -

Advertisement