நின்ற லாரி மீது பைக் மோதி 3 பள்ளி மாணவர்கள் மரணம்

2

ஓசூர்: ஓசூரில், நின்ற லாரி மீது பைக் மோதியதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 3 மாணவர்கள் பலியாகினர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மிடுகரப்பள்ளியை சேர்ந்தவர் மோகன்பாபு. செவன்த் டே தனியார் பள்ளி வாகன கிளீனர். இவரது மகன் ஹரிஸ், 14, அத்திவாடி அரசு உயர்நிலை பள்ளியில், 9ம் வகுப்பு படித்தார். அதே பகுதியை சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி வீரேந்திரசிங் மகன் ஆரியான்சிங், 13, செவன்த்டே பள்ளியில், 8ம் வகுப்பும், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோவில் பூசாரி ஜெகநாதன் மகன் மதன், 14, ஒன்பதாம் வகுப்பும் படித்தனர்.


நேற்று மதன் பள்ளிக்கு செல்லவில்லை. மாலை, 4:00 மணிக்கு மேல் பள்ளி முடிந்தவுடன், ஹரிஸ், ஆரியான் சிங் ஆகியோரை, தன் தந்தையின் டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் அழைத்துக் கொண்டு, அத்திவாடி கூட்ரோட்டில் இருந்து மத்திகிரி கூட்ரோடு நோக்கி பைக்கை ஓட்டிச் சென்றார்.


மாலை, 4:30 மணிக்கு, செவன்த்டே பள்ளி அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது பைக் மோதியது. இதில், மதன், ஆரியான் சிங் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த ஹரிஸ், மத்திகிரி கூட்ரோடு தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.



சாலையோரம் எந்த சிக்னலும் இல்லாமல் லாரியை நிறுத்தியிருந்த, கேரள மாநிலம், பாலக்காடு அருகே அப்புனி பரோலியை சேர்ந்த டிரைவர் ரவி, 50, என்பவரை, மத்திகிரி போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்தை எஸ்.பி., தங்கதுரை ஆய்வு செய்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement