கிணற்றுக்குள் விழுந்தவர் பலி: நால்வர் மீது வழக்கு

சின்னமனுார்: சின்னமனுார் அருகே சுக்காங்கல்பட்டியில் கிணற்றுக்குள் இளைஞர் தவறி விழுந்து பலியானார். இதுகுறித்து நால்வர் மீது ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

உத்தமபாளையம் ஆர்.சி. வடக்கு தெரு கென்னடி மகன் பாக்கியராஜ் 19. இவர் திருடு போன அலைபேசியை திரும்ப பெற சுக்காங்கல்பட்டிக்கு நண்பர்கள் மணிமாறன், ஜோசப் ராஜா ஆகியோருடன் சரவணன் என்பவரை தேடி சென்றனர்.

அங்கு சரவணன் இல்லை. அவர் வரும் வரை அங்குள்ள பழனிச்சாமி தோட்டம் அருகே அமர்ந்துள்ளனர்.

அங்கு வந்த ஓடைப்பட்டியை சேர்ந்த முத்து 23, கவுதம் 24, சுக்காங்கல்பட்டி கருப்பசாமி 25, சிவசங்கர் 24 ஆகியோர், 'இங்கு ஏன் அமர்ந்துள்ளீர்கள்' எனக் கேட்டதில் இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

அப்போது பாக்கியராஜ் இடுப்பில் வைத்திருந்த கத்தியை பார்த்த முத்துவும் அவரது நண்பர்களும், கத்தியை பிடுங்கி தாக்க முயற்சித்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடியபோது பாக்கியராஜ் அருகில் இருந்த கிணற்றில் விழுந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு, ஓடியவர்கள் திரும்ப வந்து பாக்கியராஜ் கிணற்றில் இருந்து மீட்டனர்.

அவரை ஆப்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாக்கியராஜ்யை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இறந்து போன பாக்கிய ராஜ் தாய் மாதா புகாரில் ஒடைப்பட்டி போலீசார், நால்வர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement