பெண் வேடத்தில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்தவர் சிக்கினார்

திருநெல்வேலி: வள்ளியூரில், பெண் வேடமிட்டு மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் மின்வாரிய காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இன்ஜினியர் அர்ஜுனன். இவரது மனைவி ருக்மணி, 68. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள். மகன் சுந்தர் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணிபுரிகிறார். மற்ற இருவரும் வெளியூரில் உள்ளனர்.

அர்ஜுனன், 48 நாட்களுக்கு முன் காலமானார். ருக்மணி அம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்தார். ஜூலை 7ல், தாய்க்கு உணவு கொடுக்க சுந்தர் சென்ற போது, ருக்மணி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த, 10 சவரன் நகைகளை காணவில்லை.

போலீசார், அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவை கவனித்தபோது, முகத்தை மறைத்தபடி செல்லும் பெண் உருவம் பதிவாகியிருந்தது.

போலீசார், தீவிரமாக அதை ஆய்வு செய்ததில், களக்காடு சிதம்பராபுரம் வீரவேல் மகன் விஜய், 28, என்பவர், பெண் வேடமிட்டு இருந்ததும், ஆள் நடமாட்டம் இல்லாத நேரம், வீட்டு சுவர் ஏறி குதித்து செல்வதும் தெரிய வந்தது.

வீட்டுக்குள் அவரை பார்த்ததும் ருக்மணி அலறியுள்ளார். இதனால், 'டிவி'யை 'ஆன்' செய்து சத்தமாக வைத்த விஜய், அவரை கொன்று நகைகளை கொள்ளையடித்து தப்பியது தெரிந்தது.

அவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டன. விரைந்து குற்றவாளியை பிடித்த டி.எஸ்.பி., வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசாரை எஸ்.பி., சிலம்பரசன், டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹதிமணி பாராட்டினர்.

Advertisement