வி.மாத்துார் எல்லம்மாள் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி : வி.மாத்தூர் எல்லம்மாள் கோவில், பூரணி பொற்கலை சமேத வேள்வி வீர ஐயனாரப்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், வி.மாத்துார் கிராமத்தில், பிரசித்தி பெற்ற எல்லம்மாள் கோவில், முருகர், விநாயகர் மற்றும் பூரணி பொற்கலை சமேத வேள்வி வீர ஐயனாரப்பன் சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவில், திருப்பணி வேலைகள் செய்து கோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

விழாவையொட்டி, நேற்று முன்தினம் (13ம் தேதி) மாலை 4:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், புதிய சிலை கரிக்கோலம் நடந்தது.

மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேச பலி, அங்குராப்பணம், முதல் கால யாக பூஜை நடந்தது.

நேற்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, பிம்பசாந்தி, 9:30 மணிக்கு யாத்ராதானம் நடந்தது. 10:00 மணிக்கு வேள்வி வீர ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம், 10:20 மணிக்கு எல்லம்மாள் கோவில் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், குல தெய்வ வழிபாட்டினர், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் குலதெய்வ வழிபாட்டினர், மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement