உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடும் எங்களுக்கு வெறும் ரூ.2000 தானா? உறுமும் உடன் பிறப்புகள்

11


'ஓரணியில் தமிழ்நாடு' என்ற தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை 234 தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. கட்சித் தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஓட்டுச்சாவடி முகவர்கள் வீடு, வீடாகச் சென்று உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும், 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற மொபைல்போன் செயலி வழியாகவும் உறுப்பினர்களை சேர்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி முகவர்கள் மட்டுமே புதிய செயலியில் உறுப்பினர்களை சேர்க்க முடியும்.


அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதியிலும் நியமிக்கப்பட்ட ஏஜன்ட்டுகள் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை துவங்கியுள்ளனர். சேர்க்கை பணிமொபைல்போன் மூலம் மேற்கொள்ளப்படுவதால், மொபைல்போனில் அவசியம் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்.

இதற்காக கட்சித் தலைமை மூலம், ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும், பூத் ஏஜன்ட்டுகளுக்கு 2 பேருக்கு 2000 ரூபாய் ரீசார்ஜ் செலவிற்கு அனுப்பியுள்ளனர். இந்த தொகை மாவட்டத்தில் உள்ள பூத் ஏஜன்ட்டுகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.



தேர்தல் நெருங்கும் நேரத்தில் மிக குறைந்த தொகையாக 2000 ரூபாய் கொடுத்திருப்பது, பூத் ஏஜன்ட்டுகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணம் உறுப்பினர் சேர்க்கைக்காக ரீசார்ஜ் செய்வதற்கு மட்டுமே பயன்படும். எங்கள் உழைப்பிற்கு இது ஈடாகுமா.


தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது, கட்சியின் நகர செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்களுக்கு மட்டும் பணமுடிப்பை தலைமை வழங்கி வருகிறது. எங்களுக்கு தருவதில்லை.

தற்போது உறுப்பினர் சேர்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கும் எங்களுக்கு வெறும் 2000 ரூபாய்தானா. கூடுதல் தொகை ஒதுக்கினால் உண்மை, உழைப்பு, நேர்மை என எதிர்பார்க்கலாம் என உடன் பிறப்புகள் கூறுகின்றனர்.

Advertisement