அரசு பள்ளிகளில் 25ல் கூடுகிறது மேலாண்மை குழு

சென்னை: அனைத்து அரசு பள்ளிகளிலும், வரும் 25ல் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழுவினருக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மாணவர்கள் முன்னேற்றத்துக்காக, ஒவ்வொரு மாதமும், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும். அந்த வகையில், இந்த கல்வியாண்டின் முதல் கூட்டத்தை, வரும் 25ம் தேதி மாலை 3:00 முதல் 4:30 மணி வரை நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில், மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் உள்ள கற்றல் திறன் குறித்தும், அதை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்க வேண்டும். கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களின் நிலை குறித்து, பெற்றோருடன் ஆலோசித்து, உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். பள்ளி மேம்பாட்டுக்காக, முன்னாள் மாணவர்களிடம் பொருள், தொகை பெற்றதை, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பு, துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதித்து, சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement