பும்ராவை காயப்படுத்த திட்டமா * ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் மீது புகார்

புதுடில்லி: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட், லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளித்த, இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, 54 பந்துகளை (5 ரன்) எதிர்கொண்டார்.
இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் முகமது கைப் கூறியது:
லார்ட்ஸ் டெஸ்டில் கடைசி நேரத்தில் பும்ரா, பேட்டராக சிறப்பாக செயல்பட்டார். இவருக்கு எதிராக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் என இருவரும் மாறி மாறி, பவுன்சர்களாக வீசினர். ஒருவேளை அவுட்டாகவில்லை என்றால், பும்ராவின் கை விரல்கள், தோளில் காயமடையும் வகையில் பவுலிங் செய்தனர்.
'இவர் தான் எங்களது பேட்டர்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளார். இவரது பவுலிங்கை எதிர்கொண்டு ரன் சேர்ப்பது எங்களுக்கு கடினமாக உள்ளது, எதிரணியில் முக்கிய பவுலரான பும்ராவை எப்படியும் காயப்படுத்த வேண்டும்,' என்ற நோக்கம் தான், அவர்கள் இருவருக்கும் இருந்தது. இதனால் தான் அப்படி பந்து வீசினர்.
இவ்வாறு அவர் கூறினார்.