சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி பலி: ஐந்து பேர் மீது கொலை வழக்கு பதிவு

கோவை: திருப்பூர் தானுார் புதுாரை சேர்ந்தவர் ஹேம்நாத், 25. சின்னவேடம்பட்டி துடியலுார் ரோட்டில் கார், பைக்குகளுக்கு பெயின்ட் அடிக்கும் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா, 25.

இருவரும் கடந்த, 5ம் தேதி அதிகாலை சரவணம்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர். அப்போது அங்கு மதுபோதையில் சரவணம்பட்டியை சேர்ந்த ஹரிபிரசாத், 26, சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சந்திரகுமார், 27, சின்னமேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரவீன், 29, நல்லாம்பாளையம் செல்வம், 28, அருண்குமார் இருந்தனர். அவர்கள் ஹேம்நாத், பிரசன்னா ஆகிய இருவரிடமும் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றி இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.

ஹரிபிரசாத், பிரவீன், சந்திரசேகர் ஆகிய மூவரும் கத்தியால் ஹேம்நாத், பிரசன்னாவை குத்தினர். இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த சரவணம்பட்டி போலீசார் பிரவீன், ஹரி பிரசாத், சந்திரகுமார், செல்வம் மற்றும் அருண்குமார் ஆகியோரை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேம்நாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ஐந்து பேர் மீதும் பதியப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரிக்கப்படுகிறது.

Advertisement