ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி: வடமாநிலத்தவர் 2 பேர் சிக்கினர் : கடலுாரில் பரபரப்பு

கடலுார்: கடலுாரில் ஏ.டி.எம்.,மில் திருட முயற்சி செய்த வடமாநில வாலிபர்கள் இரண்டு பேரை பிடித்து, புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார், செம்மண்டலம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி எ.டி.எம்., உள்ளது. இங்கு, நேற்று மாலை 6.00 மணியளவில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முயற்சித்தபோது, பணம் வரவில்லை. ஏ.டி.எம்.,மில் பணம் இல்லை என வாடிக்கையாளர்கள் திரும்பிச்சென்றனர்.

அதே வேளையில் வடமாநில வாலிபர்கள் இரண்டு பேர், ஏ.டி.எம்.மில் சந்தேகத்திற்குரிய முறையில் பணம் எடுக்க முயற்சி செய்தனர். இதை, மும்பை தலைமையகத்தில் சி.சி.டி.வி., மூலம் பார்த்து சந்தேகமடைந்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் புதுநகர் போலீசார், செம்மண்டலம் அரசு மகளிர் ஐ.டி.ஐ., எதிரில் உள்ள ஏ.டி.எம்.,மிற்கு சென்று அங்கிருந்த இந்த இரு வாலிபர்களை பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். 28 வயது மதிக்கதக்க இரு வாலிபர்களும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement