பெண்களை இழிவுபடுத்தி பேச்சு; சீமான் மீது மாதர் சங்கம் புகார்

திருப்பூர்; பெண்களை இழிவாக சீமான் பேசி வருவதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.

இந்திய மாதர் தேசிய சம்மேளனம், திருப்பூர் மாநகர் மாவட்ட குழு சார்பில், திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா பற்றி குறிப்பிட்டு பேசினார். அப்போது, பெண்கள் அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் இப்பிரச்னைக்கு குரல் கொடுக்காமல், 'எங்கே போய் விட்டீர்கள்?' என்று கூறியதோடு தொடர்ந்து பெண்களை அருவறுக்கத்தக்க வகையில் மிகவும் மோசமாக பேசி உள்ளார். இதுபோன்று பெண்களையும், பெண்கள் அமைப்புகளையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே, சீமான் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Advertisement