ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுட்டு மக்கள் வழிபாடு


நாமக்கல், ஆடி மாத பிறப்பையொட்டி, பலதானியம், வெல்லம் கலந்த தேங்காயை தீயில் சுட்டு சுவாமிக்கு படையலிட்டு மக்கள் கொண்டாடினர்.

சேலம், தர்மபுரி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில், ஆண்டுதோறும் ஆடி மாத பிறப்பையொட்டி, தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி, மஞ்சள் பூசிய தேங்காய் கண்ணில் துளையிட்டு அதில் அவல், பொட்டுக்கடலை, வெல்லம், எள், அரிசி, பாசிப்பருப்பு உள்ளிட்ட தானியங்களை நிரப்பி, அழிஞ்சி குச்சியை சொருகி, பெண்கள், குழந்தைகள், பெரியர்வர்கள் என, அனைவரும் தீயில் சுட்டு மகிழ்ந்தனர்.

தொடர்ந்து, வீடுகளில் சுவாமி படங்களுக்கு முன்பும், விநாயகர் கோவிலுக்கு எடுத்து சென்றும் வழிபாடு செய்தனர். பின், தேங்காயை உடைத்து, அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து மகிழ்ந்தனர். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆடி மாத பிறப்பு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Advertisement