சாலைகளில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பீதி

மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், முக்கிய சாலைகளில் மாடுகள் திரிவதால், வாகன ஓட்டிகள் பீதியில் பயணம் செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆடு, மாடுகள் வளர்ப்பவர்கள், தங்களின் கால்நடைகளை முறையாக வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல், சாலையில் திரிய விடுகின்றனர்.
இவை, 24 மணி நேரமும் முக்கிய சாலைகளில் சுற்றித் திரிவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைவதும், இறப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
குறிப்பாக செங்கல்பட்டு நகர பகுதிகள், சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள காய்கறி கடை, பூக்கடை உள்ளிட்ட இடங்களில் மாடுகள் உணவு தேடிச் செல்லும் போது, கடை உரிமையாளர்கள் விரட்டுகின்றனர்.
அப்போது, மாடுகள் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், காய்கறி சந்தை, மணிக்கூண்டு, அரசு மருத்துவமனை, சப் - கலெக்டர் அலுவலகம், திருப்போரூர் -- கூடுவாஞ்சேரி சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, ஸ்ரீபெரும்புதுார் சாலை உள்ளிட்ட பகுதிகளில், மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
சமீபத்தில், திருக்கச்சூர் பகுதியில் ஸ்கூட்டரில் குழந்தையுடன் சென்ற பெண், மாடு குறுக்கே சென்றதில் கீழே விழுந்து, இருவரும் பலத்த காயமடைந்தனர்.
கடந்தாண்டு ஜூலை மாதம், மறைமலை நகர் நகராட்சி பகுதியில் முதியவரை மாடு முட்டியதில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுபோன்று, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து பட்டியில் அடைக்க, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொண்டமங்கலம் கிராமத்தில், மாடு பட்டி அமைக்கப்பட்டது.
இங்கு, 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பெண்கள் மாடுகளுக்கு தீவனம், தண்ணீர் வைத்து பராமரிப்பு பணிகளை செய்து வந்தனர்.
தற்போது, இந்த மாட்டுப் பட்டி நீண்ட நாட்களாக பூட்டியே உள்ளது.
எனவே, சாலையில் திரியும் மாடுகளைப் பிடித்து, இந்த பட்டியில் அடைத்து முறையாக பராமரிக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.