தி.மலை கோவிலில் தரிசன கட்டணம் உயர்வு அமைச்சர் சேகர் பாபு தகவல்

திருவண்ணாமலை, ''திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தரிசன கட்டணம் உயர்த்தப்படுகிறது,'' என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு, அரசு கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கலெக்டர் தர்ப்பகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தற்போது நடைமுறையிலுள்ள அபிஷேக கட்டணம், 2,500ல் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தவும், சிறப்பு தரிசன டிக்கெட், 50 ரூபாயிலிருந்து, 100 ரூபாயாக உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.


பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பவுர்ணமி நாட்களில் அதிக பக்தர்கள் வரும் சூழல் உள்ளது.
பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து வரும் நிலையில், நிர்வாக அனுமதியோடு சில பணிகளை, புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். முதலில் பிரேக் தரிசனத்தை கொண்டு வர உத்தேசித்துள்ளோம். பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்றார் போல், தரிசன நேரத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளோம். அந்நேரங்களில், பிரேக் தரிசனத்தை செயல்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50 ரூபாய் கட்டணத்தை, 100 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அபிஷேகம் போன்ற நேரங்களில் காலதாமதம் ஏற்படும்போது, வெளிமாநில பக்தர்களுக்கு ஒலி, ஒளி அமைப்பு மூலம், தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படும்.
இன்னும், 20 ஆண்டுகளுக்கான தொலை நோக்குடன் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, 200 கோடி ரூபாய் செலவில் பெரும் திட்ட பணி செய்ய ஆய்வு செய்து, இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது. உயர்நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதலின்படி, அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படும். குழு நியமனம் தாமதப்படுவதால், எந்த பணியும் பாதிக்காது.
இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

Advertisement