அவர் ஒரு மனித நேய மாமேதை

1





அவர் ஒரு மனித நேய மாமேதை
-திருமதி கிருஷ்ணம்மாள் டிவிஆர்

தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் 41 வது நினைவு தினம் இ்ன்று.

அவரோடு நகமும்,சதையுமாக அறுபது ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த திருமதி கிருஷ்ணம்மாள் ராசுப்பையர்,தனது கணவர் குறித்து கூறி 'கடல் தாமரை' என்ற நுாலில் வெளியானதில் இருந்து தொகுத்தது...

டி.வி.ஆர்.,குழந்தைப் பருவ முதலே மகா புத்திசாலி,விளையாட்டு நீச்சல் என்று எல்லாவற்றிலும் அவர்தான் முதல்.மிகவும் நேர்மையானவர்,கணக்கு பாடத்தில் புலி.

என் தந்தைக்கு நான் ஒரே மகள் ஆகவே பார்த்து பார்த்து இவரை மணமகனாக தேர்ந்தெடுத்தார் இவரும் நல்ல மாப்பிள்ளையாகவே இருந்தார்.

என்னுடைய ஐந்து பையன்களும் நாகர்கோவில் என்.எல்.பி.,யில்தான் படித்தனர் பின் காரைக்குடி அழகப்பா சென்னை என்று ஆங்காங்கே சென்று படித்தனர்.

குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் எப்படி படிக்கிறார்கள் என்று அவர் கேட்டதே இல்லை அதை செய் இதைச் செய் என்றும் கூறியதுமில்லை ஒரு நாளும் கோபித்தது இல்லை.குழந்தைகள் கடுமையாக படித்து கல்லுாரிகளில் முதல் மாணவர்களாக வந்தனர்.
Latest Tamil News
அவருக்கு ஏகப்பட்ட வேலைகள் என்னென்ன பொதுக்காரியங்களில் ஈடுபட்டுள்ளார் எவ்வளவு பணம் செலவு செய்துள்ளார் என்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடமோ வேறு யாரிடமோ அவர் சொன்னதே இல்லை நாங்களும் கேட்டது இல்லை குடும்பத்தில் யார் விஷயத்திலும் அவர் தலையிட்டது இல்லை ,அவர் விஷயத்தில் குடும்பத்தினர் யாரும் தலையிட்டது இல்லை.

அவர் அப்பழுக்கில்லாதவர் மகா புத்திசாலி என்பதால் அவர் எது செய்தாலும் ரொம்ப யோசித்து சரியானதைத்தான் செய்வார் என்பதால் நான் எப்போதும் நிம்மதியாகவே இருந்தேன்.

அரிஜனங்கள் மீது மிகவும் பிரியமும் அனுதாபமும் அவருக்கு உண்டு அவர்கள் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார் இதற்காக அன்றைய கல்வி இலாகாக டைரக்டர் ஏ என் தம்பியும் இவரும் சேர்ந்து ஊர் ஊராகச் சென்று பள்ளிக்கூடம் உருவாக்கினர்.படித்த அரிஜன மாணவர்களுக்கு வேலையும் வாங்கிக் கொடுத்தார்.

தினமலர் ஆரம்பித்தபோது நிறைய நஷ்டம் வந்தது ஆனால் அதை ஒரு நாளும் சொன்னதே இல்லை அது பற்றி கவலைப்பட்டதும் இல்லை தன்னால் இதைச் சரிசெய்ய முடியும் என்று திடமாக நம்பினார் அவர் ஒரு முடிவு எடுத்துவிட்டால் பிறகு நஷ்டத்தைப் பற்றி கவலைப்பட மாட்டார்.

திருவனந்தபுரத்தில் அன்றைய முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளையின் மூலம் பெரிய நெருக்கடிகள் வந்தது கோர்ட்டுக்கு இழுத்தடித்தார்கள் ஜெயிலில் கூட தள்ளப்பார்த்தார்கள் ஆனால் அது பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை தனக்கு யாராலும் எந்தவிதமான ஆபத்தும் விளைவிக்கமுடியாது என்ற நம்பிக்கை அவருக்கு எப்போதும் உண்டு எது வந்தாலும் வரட்டும் பார்த்துக் கொள்வோம் என்று இருப்பாரே தவிர அதைப்பற்றி வீட்டில் காட்டிக் கொள்ளமாட்டார்.

ஆனால் என்னிடம் சொல்லி கவலைப்பட்ட ஒரு விஷயம் உண்டு என்றால் அது நாஞ்சில் நாட்டில் தமிழ் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் தாங்க முடியாத துன்பம் அனுபவிக்கின்றனர் அவர்கள் தமிழ்நாட்டுடன் சேர்ந்தால்தான் நிம்மதி என்று அவர்கள் கஷ்டத்தை பற்றித்தான் பகிர்ந்திருக்கிறாரே தவிர தனது கஷ்டம் என்று எதையுமே சொன்னது இல்லை.

மகன் கிருஷ்ணமூர்த்தி(முன்னாள் தினமலர் ஆசிரியர்)இரண்டு ஸ்டேட் பர்ஸ்ட் இவருக்கு இருந்த செல்வாக்கில் மகனை எளிதாக மருத்துவக் கல்லுாரியில் சேர்த்து மருத்துவராக்கியிருக்கலாம் ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை

அவரைக் கண்டு நான் எப்போதுமே பயந்தது இல்லை அறுபது ஆண்டுகள் கூடவே இருந்திருக்கிறேன் ஒரு நாள் கூட கடிந்து கொண்டது இல்லை சந்தோஷமாகவே இருந்தேன் எந்த கஷ்டம் கவலை என்றாலும் அதை அவர் மனதிற்குள் வைத்து பூட்டிக்கொள்வாரே தவிர வீட்டில் காட்டிக்கொண்டதே இல்லை.

பிள்ளைகள் திருமணம் விஷயத்தில் அவரது போக்கே தனி,அவருக்கு ஜாதகங்களில் நம்பிக்கை கிடையாது ஒரு கல்யாணத்திற்கும் ஜாதகம் பார்த்தது இல்லை வரதட்சணை கேட்டதும் இல்லை வீட்டுக்கு வரும் மருமகள் அவரது குடும்பம் பிடித்திருந்தால் போதும் கல்யாணம் நடந்துவிடும்.

அவர் தான் எடுத்துக் கொண்ட காரியங்களில் மிகவும் நம்பிக்கை கொண்டு செயல்படுவார் சோர்வு என்பதே கிடையாது எப்போதும் நாஞ்சில் நாடு பற்றியும் அதன் முன்னேற்றம் பற்றியும்தான் சிந்தனை,நாஞ்சில் நாடு தமிழகத்துடன் இணைந்த போது மிகவும் சந்தோஷப்பட்டார்.

எத்தனையோ பெரிய மனிதர்கள் பழக்கம் உண்டு ஆனால் அதைவைத்து கர்வப்பட்டுக் கொண்டது இல்லை ஜாதி,மதம்,உயர்ந்தவன்,தாழ்ந்தவன்,பணக்காரன்,ஏழை என்ற எந்தப் பாகுபாடும் இவருக்கு கிடையாது நம்மால் முடிந்ததை வஞ்சகமில்லாமல் செய்து கொண்டே இருக்கவேண்டும் என்பதே அவரது கொள்கை அப்படியே வாழ்ந்த மனித நேய மாமேதையே என் கணவர் டி.வி.ஆர்.,

-எல்.முருகராஜ்

Advertisement