ம.நீ.ம., பெண் நிர்வாகி ஆட்டோ ஓட்டுநர் மோதல்

சென்னை, வேறு பாதையில் சென்ற ஆட்டோ ஓட்டுநருடன் ஏற்பட்ட தகராறில், ம.நீ.ம., பெண் நிர்வாகியை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சினேகா மோகன் தாஸ், 35; மக்கள் நீதி மய்யம் மகளிர் அணி செயலர். இவர், தி.நகரில் இருந்து மாநில கல்லுாரியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு, நேற்று காலை தோழியுடன் செல்ல இருந்தார். அதற்காக, 'ஆன்லைன்' வாயிலாக, 170 ரூபாய்க்கு 'ஆட்டோ புக்' செய்துள்ளார்.

சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக வந்தபோது, ஆட்டோ ஓட்டு நர் 'கூகுள் மேப்'பை அணைத்து வைத்து, வேறு பாதையில் சென்றுள்ளார்.

இதனால், இரு தரப்பின ருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்தி விட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது ஒருவருக்கு ஒருவர் கைகலப்பாக மாறியது. தகவல் அறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார், தாக்குலில் ஈடுபட்ட ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரசாந்த், 35, என்பவரை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

காயமடைந்த சினேகா மோகன்தாஸ் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

'கூகுள் மேப்' ஆப் செய்துவிட்டு வேறு பாதையில், ஆட்டோவை அஜாக்கிரதையாக ஓட்டினார். இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநரிடம் தட்டிக்கேட்டபோது, அவதுாறான வார்த்தைகளால் பேசினார். அவரது உரிமத்தை ரத்து செய்வதுடன், கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement