தெரேசாபுரம் சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து, தெரேசாபுரத்தில் நிறுத்தும் தொழிற்சாலை வாகனங்களால், விபத்து ஏற்படும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் -- சிங்பெருமாள் கோவில் ஆறுவழி மாநில நெடுஞ்சாலை, 25 கி.மீ., துாரம் உடையது. சென்னக்குப்பம், மாத்துார், வல்லம், வடகால், போந்துார், ஒரகடம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தங்களின் அடிப்படை தேவைகளுக்காக, இந்த சாலையை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

தவிர, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன.

இந்த நிலையில், தொழிற்சாலை பேருந்துகள் மற்றும் தொழிற்சாலைக்கு வரும் கன்டெய்னர் வாகனங்கள், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.

நெடுஞ்சாலை வரிசைக்கட்டி நிற்கும் வாகனங்களால், சாலையின் அகலம் குறைந்து அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர்.

மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் நிற்கும் வாகனங்கள் மீது, அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு வருகின்றன.

எனவே, சாலையோரம் நிறுத்தும் வாகனங்களை கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement