அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம்; ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் உறுதி

சென்னை,: 'அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது, விரைவாக விசாரித்து முடிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் உறுதி அளித்துள்ளது.
அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் மீது, ஆரம்ப கட்ட விசாரணையை நடத்தி முடிக்க, தேர்தல் கமிஷனுக்கு கால வரம்பு நிர்ணயம் செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் அடங்கிய அமர்வு, அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் மீது, எப்போது முடிவெடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு, எழுத்து பூர்வமான விளக்கத்தை, தேர்தல் கமிஷன் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தேர்தல் கமிஷன் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், 'சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஏற்கனவே 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, எழுத்து பூர்வமான மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
'இயற்கை நீதியின் அடிப்படையில், மனுதாரர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும். ஆரம்பகட்ட விசாரணை முடிக்கப்பட்ட பின், இந்த பிரச்னை குறித்து உரிய முடிவெடுக்கப்படும்.
பீஹார் தேர்தல் தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு வேலைப் பளு அதிகமாக உள்ளது.
'அரசியல் சாசன அமைப்பான தேர்தல் கமிஷனுக்கு, விசாரணை தொடர்பாக, கால வரம்பு நிர்ணயிக்க தேவையில்லை. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, விரைவாக விசாரித்து முடிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.