ரெகுநாதகாவிரி கால்வாய் துார்வாரும் பணிகள் முறையாக நடக்கவில்லை விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

ராமநாதபுரம்: -ரெகுநாதகாவிரி கால்வாய் ரூ.16 கோடில் துார் வாரும் பணிகள் நடந்துள்ளது. இந்த பணிகள் சரியாக நடக்காததால் கலெக்டர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் குண்டாறு வடி நில உப கோட்டத்தில் ரெகுநாதகாவிரி, களரி கால்வாய் உள்ளது. புல்வாய்குளத்தில் துவங்கி எஸ்.பி. கோட்டை, ஆப்பனுார், சித்திரங்குடி, கீழகாஞ்சிரங்குளம், முதுகுளத்துார், கருமல், இளஞ்செம்பூர், தேரிருவேலி, உத்தரகோசமங்கை, களரி வரை 41 கி.மீ., கால்வாய் உள்ளது.

இந்த கால்வாயில் ரூ.16 கோடியில் துார் வாரும் பணிகள் நடந்துள்ளது. பணிகள் குறித்து தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் பாக்கியநாதன் கூறியதாவது:

அவசர கதியில் பணிகள் நடந்துள்ளது. சரியாக பணிகள் நடக்கவில்லை. 20 ஆயிரம் ஏக்கர் பயன்பெறும் வகையில் 71 கண்மாய்களுக்கு இந்த கால்வாயில் இருந்து நீர் செல்லும். இந்த பணிகள் தரமற்றதாக நடந்துள்ளது. எனவே கலெக்டர் தலைமையில் குழு அமைத்து பணிகளை பார்வையிட்ட பிறகே இந்த பணிகளை செய்தவர்களுக்கு முழுத்தொகையை விடுவிக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் முதுகுளத்துார் குண்டாறு வடி நில உப கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Advertisement