திறந்தவெளி வடிகால்வாய் பள்ளம் தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு

ஸ்ரீபெரும்புதுார்:பால்நல்லுார் கண்டிகை சாலையோரம் உள்ள, திறந்தவெளி மழைநீர் வடிகால்வாய் பள்ளத்தால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால் தடுப்பு அமைக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பால்நல்லுார் கண்டிகை பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியினர் வல்லம் கண்டிகை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை வழியாக, பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

தவிர, வல்லம் - வடகால் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலை வழியே சென்று வருகின்றன.

இந்த நிலையில், பால்நல்லுார் கண்டிகை சாலையோரம் திறந்தவெளி மழைநீர் வடிகால்வாய் உள்ளது.

சாலையோரம் உள்ள பள்ளத்தால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, திறந்தநிலை மழைநீர் வடிகால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, சாலையோரம் உள்ள திறந்தவெளி மழைநீர் வடிகால்வாய்க்கு தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement