ஏரியில் வீசப்பட்ட குப்பை தொட்டிகள்

ஆர்.கே.பேட்டை:ஊராட்சியில் குப்பை சேகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் சேதமடைந்த தொட்டிகள் ஏரியில் வீசப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையார்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையார்குப்பம், அம்மையார்குப்பம் காலனி, கே.பி.என்.கண்டிகை உள்ளிட்ட பகுதியில், 20,000 பேர் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் சேதமடைந்த தொட்டி வைக்கப்பட்டு குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை ஊராட்சி அருகே கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இந்நிலையில், பழுதடைந்த குப்பை தொட்டிகள் சீரமைக்கப்படாமலும், மறுசுழற்சிக்கு அனுப்பப்படாமலும் ஏரியில் வீசப்பட்டுள்ளன.

இது, அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குப்பை கொட்டி எரிக்கப்படுவதால் மண் வளமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, பழுதடைந்த குப்பை தொட்டியை மறுசுழற்சிக்கு அனுப்பி, குப்பையை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement