எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு மெரிட் லிஸ்ட் வெளியீடு; அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,437 மாணவர்கள்  போட்டி

புதுச்சேரி, : எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான மெரிட் லிஸ்ட்டினை சென்டாக் வெளியிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு, கடந்த 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை சென்டாக் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 8,558 பேர், இ.மெயில் கொடுத்து பதிவு செய்தநிலையில், அவர்களில், 6,678 பேர் விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர்.

அனைத்து பரிசீலனைகளும் முடிந்து தற்போது மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மொத்தம் 1,437 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் மாணவர் பிரசாந்த் 640 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் ஸ்ரீஹான் 632 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடம், மாணவி ஜெகன்நிவாசன் 629 மதிப் பெண்ணுடன் மூன்றாம் இடம், மாணவி ரக் ஷிதா 606 மதிப்பெண்ணுடன் நான்காம் இடம்பிடித்தனர்.

வழக்கமாக எம்.பி.பி.எஸ்., தரவரிசை பட்டியலில் மாகி, ஏனாம் மாணவர்கள் ஆதிக்கம் செலுத்துவர். இந்தாண்டு புதுச்சேரி மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். டாப் -25 இடங்களில் 24 மாணவர்கள் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். ஒரு மாணவர் காரைக்காலை சேர்ந்தவர். மாகி, ஏனாமினை சேர்ந்த மாணவர்கள் ஒருவர் கூட இந்தாண்டு டாப் 25 பட்டியலில் வரவில்லை.

நிர்வாக இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் மாணவர் நேகா விக்ரம் 557 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தார். நிர்வாக இடங்களுக்கு மொத்தம் 5,242 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

நிர்வாக இடங்களில் தெலுங்கு பேசும் சிறுபான்மை இடங்களுக்கு 11 மாணவர்களும், கிறிஸ்துவ சிறுபான்மையினர் 19 பேரும் விண்ணப்பித்துள்ளனர். என்.ஆர்.ஐ., இடங்களுக்கு 296 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தரவரிசை பட்டியலில் ஆட்சேபனைகள் ஏதும் இருந்தால் வரும் 29ம் தேதி மாலை 5:00 மணிக்குள் தங்களுடைய லாகின் மூலம் நுழைந்து தெரிவிக்கலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது.

கடந்தாண்டு இந்த என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு சீட்டுகளில் போலி உறவு முறை சான்றிதழ்கள் கொடுத்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் சேர முயன்றது அம்பலமானது.

இது புதுச்சேரியில் உள்ள பெற்றோர், மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பினையும் ஏற்படுத்தியது. இந்தாண்டும் என்.ஆர்.ஐ., சீட்டுகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் தீவிர தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. என்.ஆர்.ஐ., சீட்டு விண்ணப்பித்து உறவு முறை ஆவணங்கள் நேரடியாக அந்தந்த நாடுகளில் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பி உண்மை தன்மை சோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

போலி என்று தெரிய வந்தால் சான்றிதழ் சமர்ப்பித்த மாணவர்கள், அவர்களது பெற்றோர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக் கவும் சென்டாக் முடிவு செய்துள்ளது.

Advertisement