10,000 'சிசிடிவி' பொருத்தும் பணி சீனிவாசபுரத்தில் துவக்கம்

சென்னை, 'செக்யூர்கேம் இந்தியா' நிறுவனம் சார்பில், 'நம் நகரத்தை பாதுகாப்போம்' திட்டத்தின் கீழ், சென்னை முழுதும் 10,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, நேற்று துவங்கியது.

முதற்கட்டமாக, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில், 300 வீடுகளில் பொருத்தப்பட்ட கேமராக்களை, உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பின், அவர் பேசியதாவது:

உலக நாடுகள் அனைத்தும், அந்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக, பல ஆயிரம் கோடி ரூபாயை, ராணுவ தளவாடம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக செலவிடுவது வழக்கம்.

அந்நாட்டு மக்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது தான், இதன் அடிப்படை காரணம்.

ஆனால் இந்த நோக்கம், ஒரு நிறுவனத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. அதிலும், தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில், சென்னையை தேர்வு செய்து, இது போன்ற முன்னெடுப்பை எடுத்திருப்பது சிறப்பு.

முதற்கட்டமாக பொருத்தப்பட்டுள்ள சீனிவாசபுரத்தில் திருட்டு, வழிப்பறி, பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிரான குற்றங்கள் குறையும்.

மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கேமராக்களை இயக்கும் உரிமம் பொதுமக்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்தால், தேவையான ஆவணங்கள், சான்றுகளை இந்த கேமராக்களின் வழியே எளிதில் பெறலாம். எனவே, இவற்றை முறையாக பராமரித்து, பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு, நீதிபதி மகாதேவன் பேசினார்.

'செக்யூர்கேம் இந்தியா' நிறுவனர் ரிஜோய் தாமஸ் கூறுகையில், ''நம் நகரத்தை பாதுகாப்போம் திட்டத்தின் கீழ், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கேமராக்களை இலவசமாக வழங்கி வருகிறோம்.

''கேமரா தேவைப்படுவோர், வாங்க இயலாதவர்கள் https://secureourcity.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து, கேமராக்களை இலவசமாக பெறலாம்,'' என்றார்.

Advertisement