ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டை துாக்கி சென்ற காட்டு யானை அச்சத்தில் மசினகுடி பகுதி மக்கள்

கூடலுார்; முதுமலை அருகே, மசினகுடி பகுதிக்கு அதிகாலையில் வந்த காட்டு யானை ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டை துாக்கி சென்ற சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி தெப்பக்காடு சாலை மசினியம்மன் கோவில் அருகே, மசினகுடி ரேஷன் கடை அமைந்துள்ளது.

கடை ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை, பணிகள் முடித்து வழக்கம் போல ரேஷன் கடையை பூட்டி சென்றனர். நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு அப்பகுதிக்கு வந்த காட்டு யானை, ரேஷன் கடை ஷட்டரை உடைத்து, கடையினுள் இருந்த அரிசி மூட்டைகளை துாக்கி வெளியே எடுத்து வந்து உட்கொண்டது.

அதிகாலை, 4:00 மணிக்கு அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றது. சேதமடைந்த ரேஷன் கடையை வனவர் சங்கர் மற்றும் வன ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அங்கு அரிசி சிதறி காணப்பட்டது. தொடர்ந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மக்கள் கூறுகையில், 'வனப்பகுதி ஒட்டிய கிராமங்களில் உலா வந்த காட்டு யானை, தற்போது மசினகுடி நகருக்குள் நுழைந்து, ரேஷன் கடையை சேதப்படுத்தி இருப்பது, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த யானை வீடுகளை சேதப்படுத்தி மக்களை தாக்கும் ஆபத்து உள்ளது.

இதனை தடுக்க, வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement