கோதாவரி வடிகால் வாய்க்கால் துார்வாரப்படுமா? நிலங்களில் தண்ணீர் தேங்குவதால் விவசாயிகள் கவலை

சே த்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் கோதாவரி வடிகால் வாய்க்கால் உள்ளது. வீராணம் ஏரி மேல் கரையொட்டியுள்ள கோதண்டவிளாகம், நங்குடி, குமாரக்குடி, வட்டத்துார், புடையூர், குடிகாடு உள்ளிட்ட கிராம வயல்களில் தேங்கும் மழைநீர், கோதாவரி வடிகால் வாய்க்காலில் கலக்கிறது.

லால்பேட்டை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த வாய்க்கால் கரையில் சீமை கருவேல மரங்களும், ஆகாயத்தாமரை செடிகளும் அதிகளவில் படர்ந்து புதர்மண்டி காணப்படுவதால் மழைக் காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கும் அவலம் உள்ளது.

இதனால், கோதண்டவிளாகம் மற்றும் சுற்றியுள்ள கிராம நிலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நின்று பயிர்கள் சேதமாகும் நிலை ஏற்படுவதால் விவசாயிகள் கவலையடைகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போதும், தண்ணீர் தேங்கி சேதத்தை ஏற்படுத்தியது. வடிகால் வாய்க்காலை துார்வாரக் கோரி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண கோதாவரி வாய்க்காலை துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement