நிதி நிறுவனத்தில் ரூ.60 லட்சம் திருடி சென்ற நான்கு பேர் கைது

ஈரோடு, ஈரோட்டில், நிதி நிறுவனத்தின் ரூ.60 லட்சத்தை திருடி சென்று செலவழித்த நால்வரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூரை சேர்ந்தவர் அழகேசன், 53. பங்குதாரர் ராஜேந்திரனுடன் இணைந்து ஈரோடு மேட்டூர் சாலையில் நிதி நிறுவனம் (ஸ்டீம் என்ற பெயரில்) நடத்துகின்றனர். இங்கு இடையன்காட்டு வலசு பகுதியை சேர்ந்த நாகராஜன், 40, நிதி பரிவர்த்தனை பொறுப்பில் இருந்தார். அதிக பணம் கையிருப்பு இருந்ததால், ராஜேந்திரன் உறவினரான அன்பழகன் வீட்டில் பணத்தை வைப்பது வழக்கம்.

இதே போல் அன்பழகன் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த, ரூ.60 லட்சத்தை கடந்த, 22ல் நாகராஜன், நிறுவனத்துக்கு தேவை என கூறி எடுத்து சென்றார். அதன்பின் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆனது. நாகராஜன் குறித்து தகவல் இல்லை. பணத்தை நாகராஜன் எடுத்து சென்றது தெரியவந்தது.
இதுபற்றி அழகேசன் அளித்த புகார்படி, சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, இடையன்காட்டு வலசை சேர்ந்த நாகராஜனை சிசிடிவி காட்சிகள், அவரது மொபைல் போன் எண்ணை ஆதாரமாக கொண்டு தேடினர். இதில் அவர்களது இருப்பிடத்தை அறிந்த போலீசார், நாகராஜன், அவரது நண்பர்களான இடையன்காட்டு வலசை சேர்ந்த முருகேசன் மகன் எலக்ட்ரீஷியனான இளவரசன், 31, சூரம்பட்டிவலசை சேர்ந்த பாக்கியம் மகன் சமையல் தொழிலாளி மருது பாண்டியன், 34, வளையக்கார வீதியை சேர்ந்த சையத் சுத்தான் மகன் சஜாரு ரகுமான், 23, ஆகிய நால்வரையும் பிடித்து கைது செய்தனர்.
பின்னர் நால்வரும், நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement