வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட 'செயலி'யில் பதிவு செய்ய அறிவுரை

சேலம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: விவசாயிகளுக்கு சொந்தமான வேளாண் இயந்திரங்களை, பிற விவசாயிகளுக்கு வாடகைக்கு விட்டு பயன்பெற, வேளாண் பொறியியல் துறையின், 'இ - வாடகை' செயலியில் ஆதார், வங்கி கணக்கு, இயந்திரங்கள் குறித்த சரியான தகவல்களுடன் சேவை வழங்குனர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் வாடகைக்கு விடப்படும் வேளாண் இயந்திரங்களின் பதிவு சான்றிதழ், தகுதி சான்றிதழ், காப்பீடு சான்றிதழ் உள்ளிட்ட பிற ஆவணங்களை முறையாக பதிவு செய்து பராமரிக்க வேண்டும். அதேபோல் இயந்திரங்களை இயக்குபவர்கள் முறையான பயிற்சி பெற்றவர்களாகவும், ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களாகவும் அதற்கான சான்றிதழ்கள் நடப்பில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இயந்திரங்களை வாடகைக்கு கேட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு உடனுக்குடன் சேவை வழங்க, அவர்களின்
தரவுகள் அனைத்தையும் பாதுகாப்பதோடு, குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வழங்குவதை கடைப்பிடிக்க வேண்டும். இத்திட்டம் குறித்து மேலும் விபரங்களுக்கு, குமாரசாமிப்பட்டியில் உள்ள வேளாண் பொறியியல் துறை மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகம், வருவாய் கோட்ட அளவில் மேட்டூர் குஞ்சாண்டியூர்; ஆத்துார் தென்னங்குடிபாளையம் அப்பமசமுத்திரம்; சங்ககிரி குப்பனுார் பைபாஸ் உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement