வனத்துறை அலுவலகத்தில் விசாரணை: கைதி மர்ம மரணம்

உடுமலை:
உடுமலை வனச்சரக அலுவலகத்தில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்தவர், மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், உடுமலை வனச்சரகம் மேல்குருமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் மாரிமுத்து, 53. இவர், மூன்று ஆண்டுகளாக மனைவி பாண்டியம்மாள்,40, மகள்கள் சிந்து, ராதிகாவுடன்,கேரளா மாநிலம், மூணாறு செண்பகத்தொழு குடியில் வசித்து வந்துள்ளார்.

கஞ்சா பயிரிட்டதாக, ஏழு ஆண்டுக்கு முன், உடுமலை வனத்துறையினர் பதிவு செய்த வழக்கில், கடந்த 29ல், மாரிமுத்து உள்ளிட்ட 7 பேர் குற்றமற்றவர்கள் என உடுமலை ஜே.எம்.,-1 நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நேற்று முன்தினம், உடுமலை வந்து விட்டு, மூணாறுக்கு அரசு பஸ்சில் சென்ற போது,கேரளா சின்னாறு கலால் மற்றும் வணிக வரித்துறையினர் மாரிமுத்துவை சோதனை செய்து, அவர் ஒரு புலிப்பல் வைத்திருந்ததாக கூறி பஸ்சில் இருந்து இறக்கி சின்னாறு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

உடுமலை வனச்சரகர் வாசு, அமராவதி வனச்சரகர் புகழேந்தி, நேற்று முன்தினம் இரவு உடுமலை வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.

நேற்று அதிகாலை சிறுநீர் கழிப்பதாக கூறிச்சென்ற மாரிமுத்து, அங்கிருந்த குளியல் அறையில் துாக்கு மாட்டி இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையறிந்த மலைவாழ் மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், அதுவரை சடலத்தை எடுக்கக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் ஏ.டி.எஸ்.பி., ராஜேந்திரன், டி.எஸ்.பி., நமச்சிவாயம், கோட்டாட்சியர் குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். உறவினர், மலைவாழ் மக்கள் கொடுக்கும் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதியளித்தனர்.

மாலை, 3:00 மணிக்கு, வனத்துறை அலுவலகத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உடுமலை ஜே.எம்.1 நீதிமன்ற நீதிபதி நித்யகலா சம்பவ இடத்தை நேற்று நேரில் ஆய்வு செய்து, வனத்துறை அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.

@block_B@

தகவல் தெரிவிக்கவில்லை

இறந்த மாரிமுத்துவின் வக்கீல் பாலசுப்ரமணியம் கூறியதாவது: '' மேல்குருமலையில், கஞ்சாவை கண்டுபிடித்த அதிகாரிகள், குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியாமல், அங்கு வசிப்பவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்தனர். வனத்துறை அலுவலகத்தில், கணக்கில் இல்லாமல், வனக்குற்ற பொருட்களை ரகசியமாக வைத்துள்ளனர்; அவர்கள் நினைத்தால் அந்த பொருட்களை வைத்து எப்போது வேண்டுமானாலும், எங்கள் மீது பொய் வழக்கு போடலாம்'' என வழக்கில் ஆஜராகும் போது மாரிமுத்து தெரிவித்து வந்தார். கைது செய்தால், அந்நபரின் உறவினர், நண்பர், வக்கீல் என யாருக்கும் தகவல் தெரிவிப்பதில்லை. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்லை. இந்த மரணம் பல சந்தேகங்களை எழுப்புகிறது. இவ்வாறு, தெரிவித்தார்.block_B

Advertisement