லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு அச்சம்; வெளியே பூட்டிவிட்டு வீட்டுக்குள் பதுங்கிய இன்ஜினியர்

4


புவனேஸ்வர்: ஒடிஷாவில், அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனையை தவிர்க்க, வெளியே பூட்டி விட்டு, குடும்பத்துடன் வீட்டுக்குள் பதுங்கிய இன்ஜினியர் வசமாக சிக்கினார்.


சோதனை ஒடிஷாவின் புவனேஸ்வரை சேர்ந்த சாலை மற்றும் கட்டுமானப்பணி உதவி இன்ஜினியர் ராஜா கிஷோர் ஜேனா. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின்படி, கிஷோர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, புவனேஸ்வர் மற்றும் புறநகர் பகுதியில் இரு நான்கு மாடி கட்டடங்கள், ஏழு அடுக்குமாடி குடியிருப்புகள், நான்கு வணிக வளாகங்கள், ஒன்பது உயர் மதிப்புள்ள மனைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தொடர் சோதனையில், புவனேஸ்வரில் உள்ள கந்தகிரி பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு படுக்கை அறை கொண்ட வீட்டில், அவருடன் வேலை செய்யும் உதவி இன்ஜினியர் அசோக் குமார் பாண்டாவுக்கும் பங்கு இருப்பது தெரியவந்தது.



அந்த வீடு ராஜா மற்றும் பாண்டா ஆகியோரின் மனைவியர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தது. விசாரணை இதையடுத்து பாண்டாவிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை போனில் தொடர்பு கொண்டனர். அவரது, 'மொபைல் போன் சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.


இதையடுத்து அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாண்டா வீட்டுக்கு அதிகாரிகள் சோதனையிட சென்ற போது வீடு பூட்டப் பட்டிருந்தது. லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனையை தவிர்க்க, வெளியே பூட்டிவிட்டு உள்ளே குடும்பத்துடன் பாண்டா பதுங்கிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின், அவரை வெளியே வரவழைத்த அதிகாரிகள் வீட்டுக்குள் சோதனையிட்டனர்.


அப்போது வீட்டுக்கு வெளியே ஜன்னல் அருகே ஒரு பை தொங்குவதை பார்த்து அதை மீட்டனர்.அதில், 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 10 கிராம் வெள்ளி, 60 கிராம் தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் இருந்தன. தொடர்ந்து, பாண்டாவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

Advertisement