சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் உணவகங்களுக்கு வரும் வாகனங்கள்

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் சந்திப்பில் சர்வீஸ் சாலைகளை ஆக்கிரமித்து இருப்புறமும் நிறுத்தும் வாகனங்களால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

வண்டலுார் -- வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரகடம் உள்ளது. இங்கு, உணவகம், ஜவுளிக்கடை, மருந்தகம், ஹார்டுவேர்ஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

ஒரகடத்தை சுற்றியுள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் ஆயிரக்கணக்காக ஊழியர்கள் நாள்தோறும் பல்வேறு தேவைக்காக ஒரகடம் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், ஒரகடம் சந்தப்பில் உள்ள உணவகம் மற்றும் கடைகளுக்கு வருவோர், தங்களின் வாகனங்களை வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பிரதான சாலை மற்றும் சர்வீஸ் சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். இதனால், சாலையின் அகலம் குறைந்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும், இவ்வழியாக வரும் வாகனங்கள், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் மோதி, அவ்வப்போது விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, நெடுஞ்சாலையோரம் மற்றும் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement