22 ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை வீணாகும் மப்பேடு போலீஸ் குடியிருப்பு

மப்பேடு:மப்பேடு காவல் நிலைய குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு, 22 ஆண்டுகளாகியும், இன்று வரை குடிநீர் வசதி ஏற்படுத்தப்படாததால், பயன்பாடின்றி வீணாகி வருகிறது.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இங்குள்ள காவல் நிலையத்தில், சப் - இன்ஸ்பெக்டர் உட்பட, 25 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்காக, 2003ம் ஆண்டு, இரண்டு சப் - இன்ஸ்பெக்டர்கள், ஆறு காவலர்களுக்கு என, எட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த கட்டடத்தில், குடிநீர் வசதி இல்லாததால், பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.

இந்நிலையில், இந்த காவலர் குடியிருப்பு வளாகம், கடந்த 2024ம் ஆண்டு, வர்ணம் பூசி மட்டும் சீரமைக்கப்பட்டது.

ஆனால், அப்போதும் குடிநீர் வசதி ஏற்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, காவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த கட்டடம், முட்செடிகள் சூழ்ந்து வீணாவதோடு, சமூக விரோத செயல்களின் புகலிடமாகவும், குப்பை கிடங்காகவும் மாறி வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் காவலர் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்கவும், காவலர் குடியிருப்புகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement