திருச்சியில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்; காவிரியில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு வழிபாடு

திருச்சி: ஆடிப்பெருக்கு விழா முன்னிட்டு, திருச்சி மாவட்ட காவிரி ஆற்றங்கரையோரங்களில் ஆயிரக்கணக்ககான பொதுமக்கள், புதுமணத்தம்பதியர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.


தமிழகத்தில், ஆடி, 18ல், ஆடிப்பெருக்கு விழாவாக, புனித நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விவசாயம் செழிக்கவும், புதுமண தம்பதியரும், திருமணம் ஆனவர்களும் வாழ்க்கை சிறப்பாக இருக்கவும், இளம் பெண்கள் திருமணம் நடக்க வேண்டி மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டு, நீர் ஆதாரம் சிறக்கவும், காவிரி ஆற்றங்கரையில், காவிரித் தாய்க்கு சிறப்பு வழிபாடு செய்து, நன்றி தெரிவித்து வணங்குவது வழக்கம்.


நேற்று அதிகாலை முதலே, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, சிந்தாமணி ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை, முக்கொம்பு, திருப்பராய்த்துறை, கொள்ளிடம் ஆற்றங்கரை ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, தலைவாழை இலையில் காப்பரிசி, காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வைத்து, படையலிட்டு வழிபட்டனர்.


புதுமணத் தம்பதியர், புது மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். இளம்பெண்கள் திருமணம் நடக்க வேண்டி, மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு நடத்தினர்.




காவிரியில், தற்போது தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதால், குளிக்க பல இடங்களில் போலீசாரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் படித்துறைகளில் மக்கள் குதுாகலத்துடன் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.



திருச்சி மாநகர காவிரி படித்துறைகளில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை, பல்லாயிரக்கணக்கான மக்கள் காவிரி கரைகளில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Advertisement