ஆசிய 'சர்பிங்' போட்டி சென்னையில் துவக்கம்

சென்னை:'ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப்' என்ற அலை சறுக்கு போட்டிகள், சென்னையில் துவங்கின.

ஆசிய சர்பிங் கூட்டமைப்பு சார்பில், இந்தியா, தமிழ்நாடு சர்பிங் சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து, நான்காவது, 'ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் -- 2025' போட்டியை, சென்னை மாமல்லபுரத்தில் நேற்று துவக்கியது.

துவக்க விழா, மாமல்லபுரத்தின், 'ரேடிசன் ப்ளூ' ரிசார்ட்டில் நேற்று நடந்தது. இதில், 19 நாடுகளை சேர்ந்த சர்பிங் ஜாம்பவான்கள் பங்கேற்றனர்.

தொடக்க விழாவில், போட்டிகளில் பங்கேற்றுள்ள நாடுகளின் அணிவகுப்பு மற்றும் தமிழகத்தின் துடிப்பான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

மேலும், 19 நாடுகளின் அணிகளும் தங்கள் சொந்த நாட்டின் மண்ணை கொண்டு வந்தனர். அவை, ஒரு மண் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டன.

இதுகுறித்து, இந்திய சர்பிங் கூட்டமைப்பின் தலைவர் அருண் வாசு கூறியதாவது:

நம் நாட்டில் விளையாட்டு வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில், ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டியை, இந்தியாவில் நடத்துவதில் பெருமை அடைகிறேன்.

இதில், 19 நாடுகளை சேர்ந்த சர்பிங் வீரர்கள் பங்கேற்பது, சர்ப் சமூகத்திற்கு ஒரு பெரிய வளர்ச்சியாகும். மேலும், உலகளாவிய சர்பிங் இடமான, இந்தியாவின் ஆற்றலுக்கு ஒரு சான்றாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement