7 வயது சிறுமியை கடித்து குதறிய 'ராட்வைலர்' நாய்

தண்டையார்பேட்டை:தண்டையார்பேட்டையில், 7 வயது சிறுமியை 'ராட்வைலர்' நாய் கடித்து குதறியது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தண்டையார்பேட்டை, நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்தவர் வேலு. இவரது வீட்டில், ஆட்டோ ஓட்டுநரான ராஜா என்பவர், மூன்று மாதங்களுக்கு முன் குடியேறினார்.

வேலு தன் வீட்டில், வெளிநாட்டு ரக 'ராட்வைலர்' நாய் வளர்த்து வருகிறார்.

வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று வீடு திரும்பிய ஆட்டோ ஓட்டுநர் ராஜாவின், 7 வயது மகள் ஸ்மித்திகாஸ்ரீயை, நேற்று, வேலுவின் ராட்வைலர் நாய் முகத்தில் கடித்து குதறியது.

பதறியடித்து ஓடி வந்த சிறுமியின் தந்தை ராஜா, சிறுமியை காப்பாற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட நாய் இனங்களில், 'ராட்வைலர்' நாயும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement