தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செய்தனர்.

வடமதுரை அருகே கொல்லப்பட்டி ஜி.குரும்பபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் இரவு அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனையுடன் திருவிழா துவங்கியது. நேற்று அதிகாலை பாரம்பரிய வழிபாடுகள் முடிந்தபின் விரதமிருந்த பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கோயில் முன் அமர்ந்தனர். பூஜாரி லோகநாதன் ஒவ்வொரு பக்தரின் தலையிலும் தேங்காய் உடைத்தார். பின்னர் சேர்வைகாரர்களிடம் பக்தர்கள் ஒரு சாட்டையடி பெற்று கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். ஏற்பாடுகள கோயில் தலைவர் முருகேசன், செயலாளர் மீர்ராஜ், பொருளாளர் பெருமாள் செய்திருந்தனர்.

நத்தம்: ஆண்டியபட்டி மகாலட்சுமி அம்மன் கோயிலிலும் நேற்று அதிகாலையில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் வரிசையாக அமரவைக்கப்பட்டனர். செருப்பு ஆணி அணிந்து வந்த பூஜாரி பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்தார். தொடர்ந்து பக்தர்கள் சாட்டையடி பெற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement