தி.மு.க.,வில் 'உள்ளடி' வேலை அமைச்சர் எச்சரிக்கை

விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில், 3 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெற பாடுபட வேண்டும். கட்சியில் 'உள்ளடி' வேலை செய்வோரின் பதவி பறிக்கப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்தார்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சேகர், தமிழ்நாடு தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர் செஞ்சி சிவா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்களான டாக்டர் மாசிலாமணி, வழக்கறிஞர் சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், சேர்மன்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'தமிழகத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2016 ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றிருந்த திண்டிவனம், மயிலம் தொகுதிகளில், 2021 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம்.

இதற்கான காரணங்கள், கட்சியில் யார், யார் சரியாக வேலை செய்யவில்லை என்ற விவரங்கள் தலைமைக்கு தெரியும். இந்த முறை செஞ்சி, திண்டிவனம், மயிலம் ஆகிய மூன்று தொகுதிகளில் தி.மு.க., சிறப்பான வெற்றியை பெற வேண்டும்.

மேலும், முதல்வர் உத்தரவின்படி, ஓரணியில் தமிழ்நாடு மூலம் கட்சி உறுப்பினர் சேர்க்கையை முழுமையாக செய்து முடிக்க வேண்டும். ஒரு சில பொறுப்பாளர்கள், உள்ளூர் கட்சியினரை விடுத்து வெளி ஆட்களை கொண்டு வந்து உறுப்பினர் சேர்ப்பதாக தெரிய வந்துள்ளது. உள்ளூர் கட்சி நிர்வாகிகளை கண்டிப்பாக அரவணைத்து தேர்தல் பணியை செய்ய வேண்டும்.


தொடர்ந்து அலட்சியமாக செயல்படும் நிர்வாகிகள் குறித்து தலைமைக்கு பரிந்துரை செய்து, அவர்களது பதவி பறிக்கப்படும். கடந்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றிக்கு எதிராக செயல்பட்டதை போல், வரும் தேர்தலில் 'உள்ளடி வேலை' செய்ய முயல்பவர்கள் யாராக இருந்தாலும், தப்ப முடியாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என எச்சரிக்கை விடுத்தார்

- நமது நிருபர் -.

Advertisement