மோசடி நிதி நிறுவன அதிபருக்கு 'குண்டாஸ்'

திண்டுக்கல்:அதி க வட்டி தருவதாக, 10 கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஜெயந்தி. செந்தில்குமாரின் அக்கா மகன் சக்திவேல். மூவரும், பழனியில் ஸ்ரீநேசா என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர். இதன் தலைவராக செந்தில்குமார் செயல்பட்டார்.

இவர்கள், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம், 2.5 சதவீதம் வட்டி தரப்படும்.

மேலும் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 2 கிராம் தங்க நாணயத்துடன், 180வது நாளில், அதிக வட்டியுடன், அசல் தொகை திருப்பி தரப்படும் எனக்கூறி, சென்னை, கோவை, துாத்துக்குடி, மதுரை, சேலம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களிடம், பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள், திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், செந்தில்குமார் உள்ளிட்ட மூவரும், 52 பேரிடம், 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரிய வந்தது.

ஜூலை, 16ம் தேதி செந்தில்குமார், ஜெயந்தி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில், செந்தில்குமாரை, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, திண்டுக்கல் கலெக்டர் உத்தர விட்டுள்ளார்.

Advertisement