வரதட்சணை புகார்களுக்கு ஆன்லைன் போர்ட்டல்: புதிதாய் யோசித்த கேரள அரசு

திருவனந்தபுரம்: வரதட்சணை கொடுமை புகார்களுக்கு என தனி ஆன்லைன் போர்ட்டலை கேரள அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.



நாடு முழுவதும் வரதட்சணை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு எதிரான நடவடிக்கைகள் ஒருபக்கம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அதற்கான தீர்வுகள் என்பது இன்னமும் சாத்தியமாகவில்லை.


இந் நிலையில் கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வை கொடுக்கும் வகையில் புகார் அளிக்க வசதியாக அம்மாநில அரசு ஆன்லைன் போர்ட்டல் ஒன்றை உருவாக்கி இருக்கிறது.


எர்ணாகுளத்தை சேர்ந்த டெல்மி ஜாலி என்பவர் கேரள ஐகோர்ட்டில் தொடுத்த பொது நல வழக்கில், கேரள அரசு பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. அதில், 2021ம் ஆண்டு கேரள வரதட்சணை தடை சட்டம், 2004ன் படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வரதட்சணை தடை அதிகாரியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரியை அரசு நியமித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மேலும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஏதுவாக ஆன்லைன் போர்ட்டல் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், அதில் எளிதாக புகாரை பதிவு செய்யலாம் என்று கேரள அரசு கூறி உள்ளது. இதையடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு வக்கீல் அவகாசம் கோரியதை தொடர்ந்து, வழக்கு விசாரணை செப்.16ம் தேதிக்கு கோர்ட் ஒத்தி வைத்தது.

Advertisement