ஐகோர்ட்டை விட சுப்ரீம் கோர்ட் மேலானது அல்ல: தலைமை நீதிபதி கவாய்

11

புதுடில்லி: 'ஐகோர்ட்டை விட சுப்ரீம் கோர்ட் ஒன்றும் மேலானது அல்ல, அரசியமைப்பில் இரண்டுமே சமமானவை' என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசி உள்ளார்.



சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேசன் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் அவர் பேசியதாவது:


நீதிபதிகள் நியமிக்கப்படும் போது சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றமே அந்த முடிவை எடுக்க வேண்டும். ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற கொலீஜியம், உயர்நீதிமன்ற கொலீஜியத்துக்கு உத்தரவிட முடியாது. உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றத்தை காட்டிலும் மேலானதல்ல.


இரண்டு நீதிமன்றங்களும் அரசியல் சட்ட அடிப்படையிலானவை. அவை ஒன்றுக்கொன்று குறைந்தவையோ, உயர்ந்தவையோ அல்ல. எனவே, நீதிபதிகள் நியமனத்தை பொறுத்தவரை, முதல் முடிவை உயர்நீதிமன்ற கொலீஜியமே எடுக்க வேண்டும். நாங்கள் பெயர்களை பரிந்துரைத்து, அவற்றை பரிசீலிக்குமாறு மட்டுமே கேட்டுக் கொள்கிறோம். அவர்கள் அதில் திருப்தி ஆன பின்னரே, அந்த பெயர்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு வருகிறது.


நீதி, சமம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு இந்தியாவை உருவாக்குவது இன்னமும் முடிக்கப்படாத பணியாகவே இருக்கிறது. நீதிபதிகள், வக்கீல்கள் ஆகியோரின் கடமை என்பது சட்டத்தை விளக்குவதாக மட்டும் இருக்கக்கூடாது. ஜனநாயகத்தின் அடிப்படையான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் மதிப்புகளை நிலைநிறுத்தி பாதுகாப்பதும் ஆகும்.


இவ்வாறு தலைமை நீதிபதி கவாய் தமது உரையில் கூறினார்.
'சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் வக்கீல்களை உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நேரடியாக நியமிக்க வேண்டும்' என்ற கோரிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய தலைமை நீதிபதி, 'நாங்கள் உத்தரவிட முடியாது' என்கிற வகையில் இவ்வாறு பேசினார்.

Advertisement